நடிகர் சல்மான் கான் உடன் நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் 2027ஆம் ஆண்டு ஈகைத் திருநாளுக்கு வெளியாகுமென படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.
வாரிசு படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் சல்மான்கானுடன் சேர்ந்து முதல்முறையாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. தற்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்திலும் அசத்தி வருகிறார். தயாரிப்பிலும் அசத்தும் நயன்தாரா, ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஜனவரியில் சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் கரு’ படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் தயாராகி வரும் டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார்.
துணிவு படத்துடன் வெளியான வாரிசு விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூலில் முந்தியது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தில் ராஜூ இந்தப் படத்தை வழங்குகிறார்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் படக்குழு விடியோவை வெளியிட்டு, 2027 ஈகைத் திருநாளுக்கு வெளியாகுமென அறிவித்துள்ளனர்.
