இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசை அமைத்திருந்தார்.
கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சர்வைவல் த்ரில்லர் பிரிவில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரரான ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக தான் ரூ.7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதுவரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும் லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டதுடன் விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
