தனது பால்யகால நண்பனும், இயக்குநருமான பாரதிராஜாவுக்காக விரைவில் இசைக் கச்சேரி நடத்துகிறார் இளையராஜா. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், பிரபலங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பண்ணைப்புரத்தில் சிறுவர்களாக இருக்கும் போதே இளையராஜாவும், பாரதிராஜாவும் நண்பர்கள். சினிமா மீதான ஆர்வம் இவ்விரு குடும்பங்களையும் இன்னும் நெருக்கமாக்கியது. குடும்பம் என்று குறிப்பிட காரணம், இளையராஜா மட்டுமின்றி அவரது சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரும் பாரதிராஜாவுக்கு நண்பர்களே.
பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் இணைந்து தொடங்கிய பயணம் நடுவில் சின்னச்சின்ன விரிசல்களை கண்டாலும், உடைந்து போகாத அளவுக்கு அவர்களின் நட்பில் ஒரு சகோதரத்துவ நெருக்கம் இருந்தது. பொது நிகழ்ச்சி ஒன்றில் பாரதிராஜா இளையராஜாவை அவன் இவன் என்று உரிமையோடு ஒருமையில் பேசியதும், பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து, இப்போ ஏன் இப்பிடி மாறிட்டே என்று கேட்டதும் இருவரது நட்புக்கும் இடையில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. காலம் அதனை விரைவாகவே சரி செய்தது. வயதாகுகையில் பால்யத்தின் நெருக்கமும் திரும்புகிறது.
மதுரையில் இளையராஜா இசைக்கச்சேரி ஒன்றை விரைவில் நடத்த உள்ளார். இதில் கிடைக்கும் பணம் முழுவதையும் பாரதிராஜாவுக்கு அவர் அளிக்க இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கமல், ரஜினி போன்ற பாரதிராஜாவின் படங்களில் நடித்தவர்களும் ராதிகா, ராதா போன்ற பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும், பாக்யராஜ் உள்ளிட்ட அவரது சிஷ்யர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பிரமாண்டமாக நடக்கயிருக்கும் இந்த இசைக்கச்சேரி இளையராஜா இதுவரை நடத்திய கச்சேரிகளில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
