ஏ.ஆர்.ரஹ்மான் போல, தான் இசையமைத்த அனைத்து பாடல்களுக்குமான பதிப்புரிமையை இளையராஜா பெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் எக்கோ ஒலிப்பதிவு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, காப்புரிமை சட்டத்தின்படி ஊதியம் அளித்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமையாளர் எனவும், அதனால், தயாரிப்பாளரிடம் ஒப்பந்த செய்து பாடல்களுக்கான உரிமையை பெற்றுள்ளதாகவும் எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் இளையராஜா, தார்மீக உரிமைகோர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை எனவும் ஆனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் இளையராஜா எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை எனவும் எக்கோ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
இதனால், இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது எனவும் வாதிட்டது.
எக்கோ நிறுவனத்தின் வாதம் நிறைவடைந்ததால், இளையராஜா தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
