வாடகை வீட்டில் வசித்தவரை வெளியேற்ற முயன்றதாக தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை போயஸ் தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவரின் வீட்டில் அஜய்குமார் லுனாவத் என்பவர் 2022 முதல் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அஜய்குமார் வசித்த வீட்டை தனுஷ் வாங்கியதாகவும், உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தனுஷ் ஆட்களை அனுப்பியதாக அஜய்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வாடகை வீட்டின் விவகாரத்தில் தனுஷக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி வாயிலாக நடிகர் தனுஷ் ஆஜரானார். பின்னர் தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் சாவி தனுஷ் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மனுதாரருக்கும் தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
தற்போது நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
