நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீண்டும் இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசஃப், இரட்டா படங்களின் மூலம் அபாரமான நடிப்புத் திறன் கொண்டவர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முக்கியமாக, நடிகர் கமல் ஹாசனும் ஜோஜூ நடிப்பைப் பாராட்டியது பெரிதாகக் கவனிக்கப்பட்டது.
ஜோஜூ இயக்கிய பனி திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. இன்றும் பனி திரைப்படத்தைப் பாராட்டி கருத்துகள் பகிரப்படுகின்றன.
இந்த நிலையில், ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, 100 புதுமுக நடிகர்களை ஜோஜூ அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர, கதாபாத்திர தேர்வுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.
படத்தின் படப்பிடிப்பு கேரளம் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2018, ரேகா சித்திரம், ஆடு – 3 ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த காவ்யா பிலிம் கம்பெனி நிறுவனம் இப்படத்தைப் பெரிய பொருள்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
