உ.பி பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிக் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீடு உத்தர பிரதேசம் பரேலியில் உள்ளது. இங்கு கடந்த 12-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பலைச் சேர்ந்த ரவீந்திரா, அருண் என தெரியவந்தது.
ஆன்மீக தலைவர்கள் குறித்து நடிகை திஷா பதானி விமர்சித்ததால், அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பல் தெரிவித்தது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரவீந்திரா மற்றும் அருண் ஆகியோர் காசியாபாத் அருகே இருந்தபோது அவர்களை உ.பி. அதிரடிப்படை, டெல்லி போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அவர்கள் இருவரும் இறந்தனர் என போலீஸார் தெரிவித்தனர்.